மரீசி அசோகமரத்தின் நிழலையடைந்ததும், துருமகாந்தன்
கல்லிருக்கையைக் காட்ட மரீசி திகைத்தல்

440. அதனின்னிழ லவனடைதலு மதுகாவல னாவான்
பொதியின்னவிழ் மலர்சிதறுபு பொலிகென்4றுரை புகலா
மதியின்னொளி வளர்கின்றதொர் 1மணியின்சிலை காட்ட
இதுவென்னென இதுவென்னென 2வினையன்பல சொன்னான்.
 

      (இ - ள்.) அதனின் நிழல் - அந்த அசோக மரத்தின் நிழலை; அவன்
அடைதலும் - மரீசி என்னும் விஞ்சையர் தூதுவன் சேர்தலும்; அது காவலன் ஆவான் -
அந்த புட்பமாகரண்டப் பொழிலுக்குக் காவலாளாக அமைந்த துருமகாந்தன் என்பவன்;
பொதியின் அவிழ்மலர் சிதறுபு - கட்டவிழ்ந்த மலர்களைத் தூவி: பொலிக என்று
உரைபுகலா - 'நீ சிறப்புடன் விளங்குவாயாக' என்னும் வாழ்த்துரையைக் கூறி; மதியின் ஒளி
- திங்களினுடைய வெண்ணிறவொளி; வளர்கின்றது - மிகுதியாகத் தோன்றுவதாகிய; ஓர்
மணியின் சிலைகாட்ட - ஒப்பற்ற சந்திரகாந்தக்கல் வட்டத்தைக் காட்ட; இது என் என இது
என்என - 'இது என்ன! இது என்ன!!' என்று, வினையன் பலசொன்னான் - தூது
வினையின்மேல் வந்த மருசி பலமுறை சொன்னான். (எ - று.)

விஞ்சையர் தூதனாகிய மருசி அசோகமரத்தின் நிழலை அடைந்தான். பொழிற்காவலனா
யமர்ந்திருந்த துருமகாந்தன் மருசிக்குத் திங்கள் ஒளிக்கல்லைக் காட்டினான்.
அதனைக்கண்ட மருசி மிகுந்த வியப்படைந்தான். காவலன் என்னுஞ் சொல்லை, காவலன் -
காத்தலில் வல்லவன் என்றும், காவல் அன் காத்தல் தொழிலை உடையவன் என்றும்
பிரிக்கலாம். அதனின்னிழல், பொதியின்னவிழ், மதியின்னொளி என்பன விரித்தல்.

( 10 )