தூதன்வருவான் என்றுகூறியதைச் சொல்லுதல்

445. மின்னவிர் விளங்குசுடர் விஞ்சையுல காளும்
வின்னவி றடக்கைவிறல் வேலொருவன் வேண்டி
மன்னநின் மகற்கொரு மகட்கரும முன்னி
இன்னவ னினைப்பகலு வீண்டிழியு மென்றான்.
 

     (இ - ள்.) அந்தப் புரோகிதனானவன் பயாபதி மன்னனைப் பார்த்து) மன்ன -
அரசனே!, மின்அவிர் விளங்கு சுடர் - மின்னலைப்போல் இமைத்தலைச் செய்கின்ற
விளக்கம் பொருந்திய ஒளியானது அமைந்த, விஞ்சை உலகு ஆளும் - வித்தியாதர
உலகத்தை அரசாட்சி புரிகின்றவனும், வில்நவில் தடக்கை விறல் வேல் ஒருவன் -
விற்போரிற் பழகிய பெரிய கையின் கண்ணே வெற்றிபொருந்திய வேற்படையைத்
தாங்கியவனுமாகிய ஒருத்தன், வேண்டி - விரும்பி, நின்மகற்கு ஒரு மகள் கருமம் உன்னி - நின்னுடைய மகனுக்கு ஒப்பற்ற தன்னுடைய மகளைத் திருமணஞ்செய்து கொடுத்தலாகிய செய்கையை நினைத்து, இன்னவன் இனைப்பகலுள் - இவ்வாறான தன்மையை உடையவன் இத்தனை நாட்களுள், ஈண்டு இழியும் என்றான் - இப்பொழிலிலே வந்து இறங்குவான்
என்று கூறினான், (எ - று.)

வித்தியாதர உலகத்து அரசனிடமிருந்து தூதன் ஒருவன் வருவான் என்று அங்கத
நிமித்திகன் கூறிய செய்தியைத் துருமகாந்தன் இச்செய்யுளால் மருசிக்குக் கூறுகிறான்.
வேலொருவன் என்று குறிப்பித்தல் சுவலனசடியரசனை. மின்னவிர் விளங்குசுடர் ஒரு
பொருட் பன்மொழியாக அமைந்து நின்றன.

( 15 )