தன்னை அரசன் அங்கு இருக்குமாறு
அமர்த்தியதைக் கூறுதல்

447. ஆங்கவன் மொழிந்தபி னடங்கலரை யட்டான்
தேங்கமழ் பொழிற்றிகழ் சிலாதலமி தாக்கி
1ஈங்கவ னிழிந்தபி னெழுந்தெதிர்கொ ளென்ன
2நீங்கல னிருந்தன னெடுந் 3தகையி தென்றான்.
 

     (இ - ள்.) ஆங்கவன் மொழிந்தபின் அடங்கலரை அட்டான் - அப்பொழுது
அங்கதப் புரோகிதன் அவ்வாறு சொன்ன பிறகு பகைவர்களையழித்த பயாபதி மன்னன்
ஆனவன், தேம் கமழ் பொழில் - தேன்மணம் வீசுகின்ற இந்தச் சோலையில், திகழ்
சிலாதலம் இது ஆக்கி - விளங்குகின்ற நிலாவட்டக்கல் இதனைச் செய்து, ஈங்கு அவன்
இழிந்தபின் - இவ்விடத்திலே அந்த விஞ்சையர் தூதுவன் வந்து இறங்கிய பிற்பாடு, எழுந்து
எதிர்கொள் என்ன - நீயெழுந்து அவனை எதிர்கொள்வாயாக என்றுகூறி எனக்குக்
கட்டளையிட்டுள்ளதனால், நீங்கலன் இருந்தனன் - நான் இவ்விடத்தைவிட்டு நீங்காதவனாக
இருந்தேன், நெடுந்தகை - பெருமைக்குணமுடையவனே!, இது என்றான் - இந்த
நிலாநிழற்கல்வந்த வரலாறு இதுவாகும் என்று கூறினான், (எ - று.)

இச்செய்யுளால் துருமகாந்தன் நிலாவட்டக்கல் அமைக்கப்பட்ட காரணத்தைக் கூறிமுடித்தான்.

( 17 )