வண்டுகள் மயக்கம்

455. பூவிரிகு ழற்சிகைம ணிப்பறவை போகா
வாவிகொள கிற்புகையுள் விம்மியவ ரொண்கண்
காவியென வூதுவன கைத்தலம் விலங்க
மேவியிவை காந்தளென வீழமிக நொந்தார்.
 

      (இ - ள்.) பூவிரிகுழல் சிகை - பூக்கள் அணியப்பட்ட கூந்தலாகிய மயிர்
முடியினிடத்திலே பொருந்திய, மணிப்பறவை போகா - வண்டுகள் அதனைவிட்டு எழுந்து,
ஆவிகொள் அகிற்புகையுள் விம்மி - ஆவியின் தன்மையைக் கொண்ட அகிற்புகையினால்
மிகவும் வருந்தி, அவர் ஒண்கண் - அந்த மாதர்களின் ஒளிதங்கிய கண்கள், காவிஎன
ஊதுவன - கருங்குவளை மலர்கள் என்று நினைத்து அவைகளினிடத்திலே சென்று
ஊதுதலைச் செய்யும், கைத்தலம் விலங்க - அவ்வளவில் கைகள் அந்த வண்டுகளை
விரட்ட, மேவி இவை காந்தள் என வீழ - கண்களைவிட்டுப் புறப்பட்ட வண்டுகள்
கைகளைக் கண்டவுடன் இவைகள் காந்தள் மலர்கள் என்று எண்ணிக் கைகளிலே பாய,
மிகநொந்தார் - அந்த மங்கையர் மிகவும் வருந்தினார்கள், (எ - று.)

( 25 )