456. சுரும்பொடு சுழன்றுள குழற்றொகை யெழிற்கை
கரும்பொடு கலந்துள களித்தவவர் தீம்பண்
நரம்பொடு 1நடந்துள விரற்றலை யெயிற்றேர்
அரும்பொடு2பொலிந்ததுவர் வாயமிர்த மன்றே.
 

      (இ - ள்.) குழல்தொகை சுரும்பொடு சுழன்றுள - அந்த மங்கையர்களுடைய
கூந்தல் தொகுதி வண்டுகளோடு சுழலுதலையுடைய, எழில்கை கரும்பொடு கலந்துள -
மன்மதனுடைய அழகிய கையிடத்ததாகிய கரும்பின் சுவையோடே பொருந்துதல் உடையன;
களித்த - காமக்களிப்புடைய, அவர் - அம்மகளிரின், தீம்பண் - இன்னிசைப்பாடல்,
விரல்தலை - அவர் விரல்களின் நுனி, நரம்பொடு நடந்துள - யாழினது நரம்போடே
நடத்தலை உடையன, துவர் வாய் அமிர்தம் - அவருடைய செவ்விய பவளம்போன்ற வாயின் ஊறல், எயிற்று ஏர் அரும்பொடு - பற்களாகிய அழகிய முல்லையரும்போடே,
பொலிந்த - பொலிவுற்று விளங்கின, (எ - று.)

இது மகளிர்கள் யாழ்வருடிப் பாடுதல் கூறிற்று. கரும்பு - மதவேளின் வில்லாதலின்,
எழிற்கைக் கரும்பென்றார். தீம்பண் - கரும்பு போன்று சுவையுடையன என்க.

( 26 )