மைந்தர்கள் கலங்கி மெலிதல்

458. நெய்யலர் குழற்றொகை நெருப்பினடு மென்பார்
மையலர் நெடுங்கணிவை வல்லகொலை யென்பார்
தொய்யிலிள மென்முலையி னீர்சுடுதி ராயின்
உய்யல மெனத்தொழுது மைந்தர்க ளுடைந்தார்.
 

     (இ - ள்.) மைந்தர்கள் - ஆடவர்கள், நெய அலர் குழல் தொகை -
நெய்யணிதலாலே மிகச் சிறந்து விளங்குகிற கூந்தல் தொகுதியானது, நெருப்பின் அடும்
என்பார் - தீயைப்போலச் சுடுகின்றது என்றுகூறுவார்கள், மைஅலர் நெடுங்கண் இவை -
மையணிதலாலே மலர்ந்துள்ள நீண்ட கண்களாகிய இவை கொலைவல்ல என்பார் -
ஆடவர்களைக் கொலைபுரிதலிலே சிறந்தவைகள் என்று கூறுவார்கள், தொய்யில் இள
மென் முலையில் - தொய்யில் எழுதப்பெற்றவையும் இளமையையுடையவையுமாகிய
மெல்லிய கொங்கைகளால், நீர் சுடுதிராயின் - நீவிர் எங்களைச் சுட்டு வருத்துவீர்களானால்,
உய்யலம் எனத்தொழுது உடைந்தார் - நாங்கள் உயிர்வாழமாட்டோம் என்றுகூறி வணங்கி
வருந்தினார்கள், (எ - று.)

( 28 )