பொழிலின் காட்சி

491. தாதுநின்ற தேறனீர் தளித்திவற்றின் 4மேலளி
கோதுகின்ற போதுகொண்டு சிந்திநம்பி மார்களை
மாதுநின்ற மாதவிக்5கொ டிகடந்6த ளிர்க்கையால்
போதுகென்றி டங்கள்காட்டு கின்றபோற்பொ லிந்தவே.
 

     (இ - ள்.) மாதுநின்ற மாதவிக்கொடிகள் - அழகு பொருந்திய குருக்கத்திக்
கொடிகள், தாதுநின்ற தேறல்நீர் - மகரந்தத் தாதுபடிந்த தேனாகிய நீரை, தளித்து -
துளித்து, இவற்றின் மேல் - அவ்வாறு தெளித்த நீர்களின்மேல், அளிகோதுகின்ற போதுகொண்டு சிந்தி - வண்டுகள் குடைகின்ற மலர்களைக் கொண்டு தூவி, நம்பிமார்களை - விசய திவிட்டர்களை, போதுக என்று - இங்கு வருக என்று கூறி, தம் தளிர்க்கையால் - தம்முடைய தளிர்களாகிய கைகளினால், இடங்கள் காட்டுகின்ற போல் - அவர்கள்
தங்குதற்குரிய இடங்களைக் காட்டுவனபோல் பொலிந்த - விளங்கின. (எ - று.)

மாதவிக்கொடிகள் தேறலைத் துளித்தலும் போதுகளைச் சிந்துதலும் தளிரையசைத்தலும்
இயற்கை. விசய திவிட்டர்கள் பொழிலுக்கு வந்தபோது மாதவிக் கொடிகளினிடத்
துண்டாகிய இயற்கைத் தன்மை விசய திவிட்டர்களுக்கு வரவேற்பாக உரைக்கப்பட்டது.

( 61 )