(இ - ள்.) மைந்தரும் மகளிரும் - அந்நகரத்திலுள்ள இளைஞர்களும் மங்கையர்களும்; மாலை காலை என்று - இரவு என்றும் பகல் என்றும்; அந்தரப் படுத்தவர் - இடையறுத்து; அறிவது இன்மையால் - தெரிந்து கொள்வது இல்லாதபடியால்; சுந்தரம் பொன்துகள் - அழகிய பலவகை நறுமணப் பொடிகளால்; துதைந்த பொன்நகர் - நெருங்கப்பெற்ற அழகிய அப்போதனமா நகரம்; இந்திர உலகம் வந்து - விண்ணுலகமானது நிலவுலகத்திற்கு வந்து; இழிந்தது ஒக்கும் - இறங்கியிருப்பதைப் போன்றதாகும். (எ - று.) விண்ணுலகில் உள்ளார் இராப்பகல் என்னும் வேறுபா டுணராது இன்பத்துய்ப்பில் திளைத்திருப்பர். இப்போதன மாநகரத்து மங்கையரும் மைந்தரும் விண்ணுலகத்தாரைப்போல் இராப்பகல் உணராது இன்பத்தில் திளைத்து நின்றனராதலின், ‘இந்திர உலகம் வந்து இழிந்தது ஒக்கும்’ என்றார். செல்வப் பெருக்காலும் இன்பப் பெருக்காலும் ஒப்புக் கூறினார். அந்தரப்படுத்தல் - இடையறிதல். படுத்தவர் முற்றெச்சம். இன்பத்தில் அழுந்தியிருப்போர் இரவு பகல் உணரார் என்பதனை, “போகப் பெருநுகம் பூட்டிய காலை மாக விசும்பின் மதியமு ஞாயிறும் எழுதலும் படுதலும் அறியா இன்பமொடு“ எனவரும் பெருங் கதையானும் உணர்க ( 2 - 9 : 183 - 85 ) |