(இ - ள்.) விஞ்சையாளன் - மருசியானவன், அம்பொன்மாலை - அழகிய பொன்னரிமாலை, கண்கவர்ந்து - கண்ணைப் பறித்துக்கொண்டு, அலர்ந்த - விளங்கிய தன்மையமைந்ததும், செல்வ வெள்ளம் ஏய் - செல்வப் பெருக்கின் மிகுதியை ஒத்ததுமாகிய, வெம்பும் மால்களிற்று எருத்தம் மேல்கொள - சினக்கும் தன்மையுள்ள பெரிய யானையின் பிடரியின்மேல் ஏறிக்கொண்டு புறப்பட, பைம்பொன்மாலை - பசும்பொன்னினாலாகிய மாலையணிந்தனவும், வார்மதம் - மிகுந்த மதத்தையுடையனவும், பரூஉக்கை - பெருத்தகைகளையுடையவுமான, ஈர் உவாக்கள்மீ - இரண்டு அரசயானைகளின்மேல், செம்பொன்மாலை மார்பர் சேர்ந்து - செம்பொன்னினாலாகிய மாலையைப் பூண்டவர்களான விசயதிவிட்டர்கள் ஏறி, தேவரில் துளும்பினார் - தேவர்களைப் போன்ற தோற்றத்துடன் விளங்கினார்கள். (எ - று.) யானை மிகுந்த விலைமதிப்புடைய தாகலின் “செல்வ வெள்ளமேய் களிறு“ என்றார். மருசி ஒரு யானையின்மீது புறப்பட விசய திவிட்டர்களும் தனித்தனியே ஒவ்வொரு யானையின்மீது தேவர்களைப்போன்ற தோற்றத்துடன் புறப்பட்டார்கள். |