(இ - ள்.) வான்நெறிக்கண் வந்தவன் - விண்வழியாக வந்த மரீசியானவன், பால்நிறக் கதிர்நகை - பாலின் நிறத்தைப் போன்று ஒளிவீசும் வெள்ளொளியானது, பரந்த சோதியானையும் - பரவப்பெற்ற விரைகதிர் அலங்கல் செங்கேழ் - வாசனையையும் ஒளியையும் உடைய மாலையணிந்த செந்நிறவொளி பொருந்தியவனும், விண் இயங்கு ஒருவனோடும் - விண்ணில் போக்குவரவு செய்யுந் தன்மையுள்ள வனும் ஆகிய மருசியோடும், வரைக்கு எதிர்ந்து இலங்கும் மார்பின் - மலையோடு மாறுபட்டு விளங்குகின்ற மார்பையுடைய மன்னவன் குமரர் செல்வர் - பயாபதி மன்னனுடைய மக்களாகிய சீரியோர், எரிகதிர் ஏற்றைக்காலம் - எரிக்குந் தன்மையுள்ள ஒளிக்கெல்லாம் தலைமையுடைய கதிரவனுக்கு வேனிற்காலமும், எழுநிலா பருவம் - தோன்றுகின்ற நிலாவிற் குரிய காலமாகிய கூதிர்க்காலமும், மேகம் நிரைத்தெழும் இருதும் - முகில்கள் கூட்டமாக எழுந்தன்மையுள்ள கார்காலமும், அன்று - அப்பொழுது, நிரந்தது - ஒன்றுபட்டிருந்ததாகிய, ஓர்சவியர் ஆனார் - ஒப்பற்ற ஒளியையுடையவர்களாகத் தோன்றினார்கள், (எ - று.) மருசி செவ்வொளி பரந்த உடலையுடையவன்; விசயன் வெள்ளொளி விளங்கும் யாக்கையினன். திவிட்டன் நீலநிறத்தன்; இம் மூவரும் ஒன்றுசேர்ந்திருந்தது வேனிற்பருவமும் கூதிர்ப்பருவமும் கார்ப்பருவமும் ஒன்றுகூடிய தன்மையை ஒக்கும் என்று வருணித்தார். எரிக்கதிர் - எரித்தலையுடைய கதிர். இரண்டாம் வேற்றுமையுருபும் பயனுந்தொக்க தொகை. “ஆற்றலோடு புணர்ந்த வாண்பாற்கெல்லாம், ஏற்றைக் கிளவி யுரித்தெனமொழிபÓ என்றார் தொல்காப்பியனாராகலின், எரிகதிர் ஏற்றைக் காலம் என்பதற்கு எரிக்குந்தன்மையுள்ள' ஒளிக்கெல்லாம் தலைமையுடைய கதிரவனுக்குரிய வேனிற்காலம் என்று பொருள் கூறப்பட்டது. “சிலவிகாரமாம் உயர்திணைÓ என்னும் விதியால் குமரச் செல்வர் என்றாகியது, குமரர் செல்வர் என்றும் பாடம். |