பயாபதி மன்னன் மாண்பு

51. மற்றமா நகருடை மன்னன் 1றன்னுயர்
ஒற்றைவெண் குடைநிழ லுலகிற் கோருயிர்ப்
பெற்றியான் 2பயாபதி யென்னும் பேருடை
வெற்றிவேல் மணிமுடி வேந்தர் வேந்தனே.
 

     (இ - ள்.) அ மாநகர் உடை மன்னன் - அத்தகைய சிறப்புடைய போதன
நகரத்தையுடைய மன்னன் எத்தகையன் எனின்? பயாபதி என்னும் பேர் உடை - அவன்
பயாபதி என்று சொல்லப்பெறுகிற பேரையுடையவனும்; வெற்றிவேல் மணிமுடி வேந்தர்
வேந்தன் - வெற்றியைக் கொடுக்கின்ற வேலாயுதத்தையும் மணிகள் இழைத்த முடியையும்
உடைய அரசர்க்கரசனும்; தன்உயர் ஒற்றைவெள் குடை நிழல் - தன்னுடைய உயர்ந்த
ஒப்பற்ற வெண்கொற்றக் குடைநிழலிலே வாழ்கின்ற; உலகிற்கு ஓர் உயிர்ப்பெற்றியான் -
உலகமாகிய உடலுக்குத் தான் ஓர் உயிராக விளங்குகின்ற பெருமையை உடையவனும்
ஆவான். (எ - று.)

     பயாபதி மன்னன், தனது நாட்டு மக்களின் உயிரைப்போற் சிறந்து விளங்குகின்றான்
என்க. மற்று-அசை. அமாநகர்-தொகுத்தல். பிரசாபதி என்னும் சொல் பயாபதி என்று
திரிந்தது. பிரசாபதி என்னுஞ் சொல்லுக்குப் பொருள் மக்கட்குத் தலைவன் என்பதாகும்.
வேந்தர் : வேந்தன். மன்னர்கட்கு மன்னனாக இருப்பவன் “நெல்லுமுயிரன்றே
நீருமுயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலையுலகம்“ என்றார் புறத்தினும் ( 186 ) உலகம்
ஈண்டுயிர்த்தொகுதி. மன்னுயிர்க்கெல்லாம் ஓருயிராய்த் திகழ்பவன் என்பதாம்.
 

 (16)