பயாபதி மன்னன் வீற்றிருந்த காட்சி

510. வீரியக் குமர ரோடும் விஞ்சையஞ் செல்வ னோடும்
காரியக் கிழவர் சூழக் 1கவின்றுகண் குளிரத் தோன்றி
ஆரியன் னலர்ந்த சோதி யருங்கலப் பீட நெற்றித்
தாரகை யணிந்து தோன்றுஞ் 2சந்திர சவிய னானான்.
 

     (இ - ள்.) ஆரியன் - சிறந்தவனாகிய பயாபதி மன்னவன், வீரியக்குமரரோடும் -
ஆண்மைக் குணமுள்ள விசயதிவிட்டர்களென்கிற மக்களோடும், விஞ்சை அம்
செல்வனோடும் - வித்தியாதரச் செல்வனாகிய மருசியோடும், காரியக்கிழவர் சூழ -
அரசியற் காரியங்கட்குரியவர்களாகிய அமைச்சர்கள் முதலியோர் சுற்றிலும் வீற்றிருக்க,
அலர்ந்தசோதி - பரவிய ஒளியையுடைய, அருங்கலப்பீடம் நெற்றி - அரிய
அணியைப்போற் சிறந்த அரியணையின் மேலிடத்திலே, கவின்று - விளங்கி, கண்குளிர -
கண்டவர் கண்கள் குளிர்ச்சியடையுமாறு, தோன்றி - காணப்பெற்று, தாரகை -
விண்மீன்களால், அணிந்து - அழகு செய்யப்பெற்று, தோன்றும் - விளங்குகின்ற, சந்திர
சவியன் ஆனான் - திங்கள் போன்று ஒளி படைத்தவனாக விளங்கினான், (எ - று.)

மருசி, விசயதிவிட்டர்கள், அமைச்சர்கள் ஆகியோர் தன்னைச்சூழ அவர்களாற்
பொலிவுபெற்று விளங்கும் பயாபதி மன்னவன், விண்மீன்கள் தன்னைச் சூழச் சிறப்புற்று
விளங்கும் திங்கள்போல விளங்கினான் என்பதாம். அருங்கலன்க ளணியப்பெற்ற அரியணை
எனினுமாம்.

( 80 )