மருசி கொண்டுவந்த திருமுகத்தை மதிவரன் வாங்குதல்

512. விஞ்சைய னெழுந்து தங்கோன் வெள்ளிவே தண்ட நோக்கி
அஞ்சலித் தடக்கை கூப்பி யரக்கிலச் சினையின் வைத்த
எஞ்சலி லோலை காட்ட விறைமகன் குறிப்பு நோக்கி
வஞ்சமில் வயங்கு கேள்வி மதிவரன் 1கரத்தில் வாங்கி.
 

     (இ - ள்.) விஞ்சையன் எழுந்து - வித்தியாதரனாகிய மருசியென்பவன் எழுந்து,
தம்கோன் வெள்ளி வேதண்டம் நோக்கி - தம்முடைய அரசனாகிய சுவலனசடியின்
வெள்ளி மலையைப் பார்த்து, தடகை அஞ்சலி கூப்பி - தன்னுடைய பெரிய கையை
அஞ்சலியாகக் குவித்து, அரக்கு இலச்சினையின் வைத்த - அரக்கினாலியன்ற முத்திரையை
வைத்த, எஞ்சலில் ஓலைகாட்ட - குறைதலில்லாத திருமுக வோலையை எடுத்து
நீட்ட, இறைமகன் குறிப்பு நோக்கி - அரசனுடைய எண்ணத்தை உணர்ந்து, வஞ்சம் இல்
வயங்கு கேள்வி - குற்றமற விளங்குகின்ற நூற்கேள்வியையுடைய, மதிவரன் கரத்தில்
வாங்கி - மதிவரன் என்னும் பெயரினையுடையவன் தன்னுடைய கையிலே பெற்றுக்கொண்டு,
(எ - று.)

அடுத்த செய்யுளில் வாசிக்கின்றான் என்பதனோடு சென்று இயையும். ஓலையிற் செய்தியை
எழுதி அதனைச் சுருள்வைத்து, அவ்வோலைச் சுருளை எளிதிற்பிரிக்க முடியாதவாறு
அரக்கைக் கொண்டு இலச்சினையிட்டுத் திருமுகம் அனுப்பிச் செய்தி தெரிவித்தல்
பண்டைக்கால வழக்கு; மதிவரன். மேன்மையான அறிவையுடையவன் என்று பொருள்தரும்.
அரசர்களின் அவையில் திருமுகம் எழுதுதற்கும் படித்தற்கும் ஆள்கள் இருப்பர்.

( 82 )