515. அல்லதூஉங் கரும மாவ தலங்குதா ரிவுளித் திண்டேர்
வல்லவ னிளைய நம்பிக் 2குரியளா வழங்கப் பட்டாள்
மல்லக மார்பி னான்றன் மருமக ளிவளைக் கூவி
வல்லிதிற் கொடுக்க மன்னன் 3வாழ்கதன் கண்ணி மாதோ.
 

     (இ - ள்.) அல்லதூஉம் - அல்லாமலும், கருமம் ஆவது - இப்பொழுது நடைபெறவேண்டிய செயலாவது, அலங்குதார் - அசைகின்ற பிடரிமயிரையுடைய, இவுளி - குதிரைபூட்டிய, திண்தேர் வல்லவன் - திண்ணிய தேரைச் செலுத்துவதில் வல்லவனாகிய, இளைய நம்பிக்கு - உன் மக்களில் இளையவனும் எல்லாப் பண்புகளிலும் சிறந்தவனுமாகிய திவிட்டனுக்கு, உரியள் ஆ வழங்கப்பட்டாள் - இல்லறத்திற்குரிய மனைவியாக என் மகளாகிய சுயம்பிரபை கொடுக்கப்பட்டாள், மல்லக மார்பினான் - வலிமையைத்
தன்னிடத்தே கொண்ட மார்பையுடையவனாகிய பயாபதி மன்னன், தன் மருமகள் இவளைக் கூவி - தன் மருமகளாகிய இவளையழைத்து, வல்லிதிற் கொடுக்க - விரைவில் தன்
மகனுக்குத் திருமணஞ் செய்துகொடுப்பானாக!, தன் கண்ணி வாழ்க - அந்தப் பயாபதி
மன்னனுடைய மாலை வாழ்க, (எ - று.)

என்னுடைய பெண்ணை நின் இளையமகனுக்கு வாழ்க்கைத் துணைவியாகக் கொடுப்பதற்கு
முடிவுசெய்தேன். ஆகையால் நீ இவளை நின் மகனுக்குத் திருமணஞ் செய்துகொடுப்பாயாக!
என்பது திருமுகச் செய்தி. இறுதியில் கண்ணிவாழ்க என்று வாழ்த்துக் கூறப்பட்டது.
மாலையை வாழ்த்துதலும் அஃதணிந்தானை வாழ்த்துதலோடு ஒக்கும். இவ்வாறு வாழ்த்துக்
கூறுதல் மரபு. “வாழ்க அங்கண்ணி மாதோ“ என்பதும் காண்க. கண்ணி - முடியிற் சூடும்
மாலை.

( 85 )