மருசி சினந்து கூறுவன

518. முன்னமோர் கருமம் வேண்டி மொழிபவேல் 4மனிதர் தம்மால்
என்னவ ரேனு மாக விகழ்ந்திடப் படுவ 5போலாம்
அன்னதே யுலக வார்த்தை யாவதின் றறியும் வண்ணம்
மின்னவின் றிலங்கும் வேலோய் நின்னுழை விளங்கிற் றன்றே.
 

     (இ - ள்.) ஓர் கருமம் வேண்டி - மனிதர்களிடத்தில் ஒரு காரியத்தை விரும்பி,
முன்னம் மொழிப ஏல் - முதலில் சொன்னால், (சொல்லுபவர்) என்னவர் ஏன் உம் ஆக -
எவ்வளவு மேன்மையுடையவர்களாக இருந்தாலும், மனிதர் தம்மால் - மனிதர்களால்,
இகழ்ந்திடப் படுபபோல் ஆம் - இகழ்ந்திடப்படுவார்கள் போலும், உலக வார்த்தை -
உலகமொழி, அன்னதே - அவ்வாறேயுள்ளது. ஆவது - அவ்வாறாதலை, அறியும் வண்ணம்
- அறிந்துகொள்ளும்படி, மின்நவின்று இலங்கும் வேலோய் - மின்னலின் தன்மை பழகி
விளங்குகின்ற வேற்படையையுடையவனே, இன்று - இப்பொழுது, நின் உழை விளங்கிற்று -
உன்னிடத்திலே விளக்கமாய் விட்டது, (எ - று.)

மனிதர்களிடத்தில் ஒருகாரியத்தை நாடிச்சென்றால் எவ்வளவு பெருமை யுடையவர்களாக
இருந்தாலும் அவர்கள் மனிதர்களால் இகழ்ச்சி செய்யப் பெறுவார்கள் என்னும் எண்ணம்
வித்தியாதர உலகத்தில் இருந்தது. அஃது உண்மையாதலை இப்பொழுது அறிந்து
கொண்டேன் என்று மருசி கூறுகிறான். அவன் இவ்வாறு கூறக் காரணம் பயாபதி
மன்னனுக்கு வியப்பினால் ஏற்பட்ட திகைப்பும் மருசியின் பதற்றமுமேயாகும். நின்னுழை :
உழை ஏழனுருபு. அன்று + ஏ: தேற்றம்; ஈற்றசையுமாம்.

( 88 )