பயாபதி மன்னனது சிறப்பு

52. எண்ணின ரெண்ணகப் படாத செய்கையான்
1அண்ணிய ரகன்றவர் திறத்து 2மாணையான்
நண்ணுநர் பகைவரென் றிவர்க்கு நாளினும்
தண்ணியன் வெய்யனந் தானை மன்னனே.
 
     (இ - ள்.) அம் தானை மன்னன் - அழகிய படையை உடைய அந்தப் பயாபதி
அரசன்; எண்ணினர் எண் அகப்படாத செய்கையான் - எண்ணிப் பார்க்கின்றவர்களது
எண்ணத்துக்குப் புலப்படாத செய்கைகளையுடையவன்; அண்ணியர் அகன்றவர் திறத்தும்
ஆணையான் - தன்னை நெருங்கியுள்ளவர் களிடத்திலும் விலகியுள்ளவர்களிடத்திலும் ஒரே
தன்மையாகச் செல்லும் ஆணையையுடையவன்; நண்ணுநர் பகைவர் என்ற இவர்க்கு -
நட்பாளர் பகைவர் என்று சொல்லப்பெறுகின்ற இவர்கட்கு; நாளினும் - எக்காலத்தினும்;
தண்ணியன்வெய்யன் - முறையே தண்ணளியையுங் கொடுமையையும் உடையவன். (எ - று.)

     தம் உள்ளக் கருத்தினைப் பிறர் உணர்ந்துகொள்ளாதவாறு நடந்து கொள்ள
வேண்டியது மன்னர்கள் கடமையாகலின், “எண்ணினரெண்ணகப் படாத செய்கையான்“
என்றார். நட்டோர் மற்றவர் ஆகிய எத்தகை யோரிடத்தும் ஒரே தன்மையான
செங்கோலையுடையான் என்பார், “அண்ணிய ரகன்றவர் திறத்து மாணையான்“ என்றார்.
பின்னிரண்டடிகளில் நண்ணுநர்க்குத் தண்ணியன்; பகைவர்க்கு வெய்யவன் என்று ஏற்குமாறு
பொருள்படுதலை முறை நிரனிறைப் பொருள்கோள் என்பர்

( 17 )