523. உள்ளிய மரங்கொள் சோலை மண்மிசை யுறையு மாந்தர்
ஒள்ளிய ரேனுந் தக்க துணர்பவ ரில்லை போலாம்
வெள்ளியஞ் சிலம்பி னெங்கோன் விடுத்ததே யேது வாக
1எள்ளியோ ருரையு மீயா திருந்தனை யிறைவ வென்றான்.
 

     (இ - ள்.) உள்ளிய - மதிக்கத்தக்க, மரங்கொள்சோலை - மரங்களைக் கொண்ட
சோலையை உடைய, மண்மிசை - இந்நிலவுலகத்தில், உறையும் மாந்தர் - வாழுகின்ற
மனிதர்கள், ஒள்ளியரேனும் - கூர்த்த அறிவுடையராக இருந்தாலும், தக்கது - தகுதியான
செயலை; உணர்பவர் இல்லை போலாம் - அறியும் ஆற்றல் உடையாரிலர் என்று
தெரிகின்றது, இறைவ - அரசனே!, வெள்ளியஞ்சிலம்பின் எங்கோன் - வெள்ளிமலையிலே
உள்ள எம்முடைய தலைவன், விடுத்ததே - வலியத் தூதாக விடுத்ததையே. ஏதுவாக -
காரணமாகக்கொண்டு, எள்ளி - இகழ்ந்து, ஓர் உரையும் ஈயாது இருந்தனை என்றான்-ஒரு
மொழியும் பதிலுரையாமல் இருந்தாய் என்று கூறினான், (எ-று.)
உலகத்து மனிதர்கள் அறிவுடையவர்களாக இருந்தாலும், தக்கது தகாதது ஆகிய
செயல்களை அறியக்கூடியவர்கள் இலரென்று தெரிகிறது. எம் அரசன் வலியத்
தூதுவிடுத்ததையே நீ ஒரு காரணமாகக் கொண்டு அவனை இகழ்ந்து
பதிலுரையாமலிருக்கிறாய் என்கிறான் மருசி. பயாபதி மன்னன் திகைத்திருந்ததையே
காரணமாகக்கொண்டு மருசியானவன் இவ்வாறு அரசனைத் தாக்கிப்பேசி நிறுத்தினான்.
உள்ளிய மரங்கொள் சோலை என்ப தற்குக் கற்பகச் சோலை எனவும் பொருள் உரைப்பர்.
அது சிறந்ததன்று.

( 93 )