(இ - ள்.) மெய்ப்புடை தெரிந்து - உண்மை நிலையை ஆராய்ந்து, மேலை - முற்பிறப்பில், விழுதவம் - சிறந்த தவத்தை, முயன்று நோற்றார்க்கு - முயற்சியுடன் செய்தவர்க்கு, உங்கள் சேரி - நீங்கள் சேர்ந்துள்ள இடமாகிய வித்தியாதர உலகத்தின், உயர்நிலை - உயர்ந்த நிலைமையை யுடைய, செல்வம் எல்லாம் - செல்வங்கள் முற்றும், ஒப்புடைத்து - நுகர்தற்கு ஏற்றதாகும், எப்படி முயறுமேனும் - மக்களாகிய நாங்கள் எவ்வளவு முயற்சி செய்தோமென்றாலும், எங்களுக்கு எய்தல் ஆகாது - எங்களால் அந்தச் செல்வத்தை அடைய முடியாது, அப்படி - அவ்வாறே, நீயும் முன்னர் மொழிந்தனை அன்றே - நீயும் முன்பு சொன்னாயல்லவா, என்றான் - என்று கூறினான். (பயாபதி மன்னன்) (எ - று.) முற்பிறப்பில் தவஞ்செய்தவர்களுக்குத்தான் விஞ்சையராகி இன்புற முடியும். மக்களாகப பிறந்தோர் எவ்வளவு முயற்சிசெய்தாலும் விஞ்சையர் செல்வத்தைத் துய்த்தல் இயலாது; இவ்வாறே நீயும் முன்பு சொன்னாயன்றோ, என்று பயாபதி மன்னன் தான் பேசாதிருந்ததற்குத் தக்க காரணம் கூறினான். “விஞ்சையர் செல்வந்தானும் நுரைமலி பொள்ளல் யாக்கை மனிதர்க்கு நுகரலாமே“ என்று முன்னர்க் குறிப்பிட்டவைகளை யெல்லாம் உள்ளத்திற் கொண்டு பயாபதிமன்னன் இவ்வாறு பதிலுரைத்தான். நோற்றார் : வினையாலணையும் பெயர். நோல் : பகுதி. முயறும் : தன்மைப் பன்மை வினைமுற்று : முயல் - பகுதி. தும் - விகுதி. |