(இ - ள்.) கருமணி கடகம் கையாய் - சிறந்த மணியைக் கொண்டு செய்த கடகத்தையணிந்த கைகளையுடையவனே! அவளோடும் வந்தேன்யான் - அக்காந்திமதியோடு பிறந்தேன் நான், மன்ன - அரசனே!, மருசி என்பேன் - மருசியென்னும் பெயரினையுடையேன், அற்றம்இல் கேள்வி - எந்தை குறைதலில்லாத நூற்கேள்வியையுடைய என்னுடைய தந்தை, அஞ்சுமான் என்னும் பேரான் - அஞ்சுமான் என்னும் பெயரினையுடையவன், பெற்றதாய் அருசிமாலை - எம்மைப் பெற்றதாய் அருசிமாலை யென்பவளாவாள், பெருமகள் அருளினால் - பெருமை பெற்ற அந்த என் தாயினாலே, யான் கற்ற நூல் பல்ல ஆகும் - யான் ஓதியுணர்ந்த நூல்கள் பலவாகும், (எ - று.) நான் காந்திமதியுடன் பிறந்தவன். என்னுடைய தந்தையின் பெயர் அஞ்சுமான். என் தாய்பெயர் அருசிமாலை. நான் அவள்பாற் கற்றுக்கொண்ட நூல்கள் பலவாகும் என்க. மருசியினுடைய தந்தையின் பெயர் அஞ்சுமான் : தாயின் பெயர் அருசிமாலை; உடன்பிறந்தாளுடைய பெயர் காந்திமதி. உடன் பிறந்தாட்கு வாயுவேகை மகளாவாள் என்றவாறு. பெருமகள் அருளினால் என்பதற்குக் கலைமகள் என்று பொருள் கூறினும் பொருந்தும். பல்ல : விரித்தல் விகாரம். |