(இ - ள்.) புலமைமிக்கான் - நல்லறிவு மிகுந்தவனாகிய, அவன் - அந்த நமி என்பவன், அரசுவேண்டான் - அரசாட்சி செய்தலை விரும்பா தவனாகி, அறம் கடல்படைத்த நாதன் - அறக்கடலைப் படைத்திட்ட தலைவனும், பங்கயம் கமழும் மேனி - தாமரைமலரின் மணம் வீசப்பெற்ற உடலையும், பவத்திர பரமயோகி - பரிசுத்தமான பரமயோகியும் ஆன அருகக் கடவுள், தங்கிய தியானப்போழ்தில் - தங்கப்பெற்ற தியானத்தை யுடைய காலத்திலே, தாழ்ந்து - வணங்கி, பொங்கிய காதல் கூர - மேன்மேற் கிளந்த அன்பு மிகுதியாக, பாடினன் அந்தக் கடவுளை நோக்கிப் பாடலானான், (எ - று.) நமி அரசு வேண்டாமல் அருகக்கடவுளை உள்ளத்திற்கொண்டு தியானித்தான். அந்தத் தியான மிகுதியால் அருகக்கடவுள் வெளிப்பட்டாற் போல அறிவுக்குப் புலனாயிற்று. அக்கடவுளைப் பணிந்து பேரன்புகொண்டு பாடலானான் என்பதாம். பாடியதை அடுத்த மூன்று பாடல்களிற் காண்க. அங்கு : அசை. |