(இ - ள்.) வடிநிழல் வனை கதிர் எஃகின் மன்னவன் - தீயிலிட்டுக் காய்ச்சி அடிக்கப்பட்டு ஒளியைச் செய்கின்ற கூர்மையுள்ள வேற்படையை யுடைய பயாபதி மன்னனது; அடிநிழல்-கால் அடிகளின் நிழல்; அரசரை அளிக்கும் - பிற நாட்டுச் சிற்றரசர்களைப் பாதுகாக்கும்; ஆய்கதிர் முடிநிழல் - சிறந்த ஒளியையுடைய முடியின் நிழல் முனிவரர் சரணம் மூழ்கும் - சிறந்த முனிவர்களது திருவடிகளிலே படியும்; குடை நிழல் - வெண்கொற்றக் குடையின் நிழல்; உலகு எலாம் குளிர நின்றது - உலகத்திலுள்ள உயிர்த் தொகைகளெல்லாம் இன்பத்தையடையுமாறு சிறந்து நிற்கும். (எ - று.) பயாபதி மன்னனுடைய அடிநிழல் சிற்றரசர்களைப் பாதுகாக்கும்; முடிநிழல் முனிவர்களது திருவடிகளிலே படியும்; குடைநிழல் உலகத்துயிர்கட்கு இன்பத்தையளிக்கும். முனிவர்-காமம் வெகுளி மயக்கம் என்னும் முக்குற்றங்களையும் முனிந்தவர். வரர்-மேலானவர். குளிர நிற்றல் யாதொரு துன்பமும் இல்லாமல் இன்பத்தை யடைந்திருத்தல். |