மருசி மேலுங் கூறத் தொடங்குதல்

562. குடித்தொட ரிரண்டுங் கேட்டே குறுமயி ரெறிந்து கண்ணுள்
பொடித்தநீர்த் திவலை சிந்தப் 2 புகழ்ந்தன ரிருந்த வேந்தர்
அடுத்தெரி யலர்ந்த செம்போ னணிமணி முடியி னானங்
கெடுத்துரை கொடாத முன்னங் கேசர னிதனைச் சொன்னான்.
 

     (இ - ள்.) குடித்தொடர் இரண்டும் கேட்டு - சுவலனசடி பயாபதி என்னும்
இருதிறத்தவரின் வழிமுறைச் செய்தியையும் கேட்டு, இருந்த வேந்தர் - அங்குக் கூடியிருந்த
அரசர்கள், குறுமயிர் எறிந்து - மயிர்க்கூச்செறிந்து, கண்ணுள் - கண்ணினுள்ளே, பொடித்த
நீர்த்திவலை சிந்தப்புகழ்ந்தனர் - திவலை திவலையாகத் தோன்றிய நீர்த்துளி கீழேவிழ
இருமரபையும் புகழ்ந்து பேசினார்கள், அடுத்து எரி அலர்ந்த செம்பொன் - உடனே
நெருப்பிற்காய்ச்சி யுருக்கிய மாற்றுயர்ந்த பொன்னாலியன்ற, அணிமணி முடியினான் -
அழகிய மணிகள் அழுத்திய முடியினையுடைய பயாபதி மன்னன், அங்கு - அப்போது,
எடுத்து உரைகொடாத முன்னம் - மேற்கொண்டு செய்தியை எடுத்துப் பேசத்தொடங்
குவதற்கு முன்பு, கேசரன் இதனைச்சொன்னான் - மருசியானவன் மேற்செய்யுளில் வருஞ்செய்தியைச் சொல்லலானான். (எ - று.)

  சுவலனசடி பயாபதி ஆகிய இருமன்னர்களின் வழிமுறை வரலாறுகளையுங் கேட்டு
அங்கிருந்த மன்னர்கள் இன்பக்கண்ணீர் சொரிந்தனர். பயாபதி மன்னன் பேசத் தொடங்குவதற்கு முன்பு மருசி மேலும் பேசலானான்.

( 132 )