மரீசி சடிமன்னனைக் காண்டல்

573. மற்ற மாநகர் மருசி புக்கபின்
கொற்ற வேலவன் கோயின் மாநெதி
முற்று வான்கடை மூன்றுஞ் சென்றுகோன்
1சுற்று வார்கழ றொழுது துன்னினான்.

     (இ - ள்.) மற்ற மாநகர் - அந்தப் பெரியநகரமாகிய இரதநூபுரத்தின் கண், மருசி -
மரீசி என்னும் தூதன், புக்கபின் - புகுந்த பிறகு, கொற்றம் வேலவன் - வெற்றியாற்சிறந்த
வேற்படையையுடைய சடி வேந்தனுடைய, கோயில் - அரண்மனையினமைந்த, மாநெதி -
பெருஞ்செல்வம், முற்று வான்கடை மூன்றும் - நிறைந்துள்ள உயரிய வாயில்கள்
மூன்றனையும், சென்று - கடந்துபோய், கோன் - அச் சடி வேந்தனுடைய, சுற்று வார் கழல்
- சுற்றிக்கடப்பட்ட நீண்ட கழல்களையுடைய அடிகளை, தொழுது - வணங்கி, துன்னினான்
- எய்தினான், (எ - று.)

  போதன நகரத்தினின்றும் வந்த மரீசி என்னுந் தூதன், வெற்றி வேலையுடைய சுவலனசடி
மன்னன்பால் அச்செய்தியை அறிவிக்க, அம் மன்னன் அரண்மனையை எய்தி,
அம்மன்னனை வணங்கினான் என்க. மாநெதி - பெருஞ்செல்வம். நெதி - இறைப்பொருள்
என்பாருமுளர். இவ்வாசிரியர் நெதி என்னும் இச்சொல்லைப் பிறாண்டும் வழங்கியுள்ளார்.
ஆண்டெல்லாம் செல்வம் என்ற பொருளிலேயே வழங்கப்படுகின்றது. சடி மன்னன்
இத்தூதன் வாயிலாய் வெற்றிச் செய்தியையே கேட்கவிருத்தலைக் கருதிப்போலும் கொற்ற
வேலவன் எனக் குறிப்பாராயினர். கழலும் சடியின் வெற்றியையே விளக்கிநின்றது.

( 1 )