583. சுரிந்த குஞ்சியன் சுடரு மேனியன்
எரிந்த பூணின னிலங்கு தாரினன்
வரிந்த கச்சைய னொருவன் வந்துவண்
டிரிந்து பாயவிங் கேறு கென்றதும்.
 
 

      (இ - ள்.) சுரிந்த குஞ்சியன் - சுருண்ட தலைமயிரையுடையவனும், சுடரும்
மேனியன் - ஒளிரும் உடல்படைத்தவனும், எரிந்த பூணினன் - ஒளிவீசும் அணிகளை
அணிந்தவனும், இலங்கு தாரினன் - விளங்குகின்ற மலர்மாலையை அணிந்தவனும், வரிந்த
கச்சையன் - வரிந்துகட்டிய கச்சையை உடையவனும் ஆகிய, ஒருவன் வந்து -
(துருமகாந்தன் என்னும் பெயரையுடைய காவலன்) ஒருவன் தன்பால்வந்து, வண்டு -
சிலாதலத்தின் மொய்க்கும் வண்டுகள், இரிந்துபாய - அகன்று ஓடுமாறு, இங்கு -
இச்சிலாதலத்தின்மிசை, ஏறுக என்றதும் - நீ ஏறி அமர்வாயாக என்று முகமன்
மொழிந்ததும், (எ - று.)

குஞ்சியனும், மேனியனும், பூணினனும், தாரினனும், கச்சையனுமாகிய ஒருவன் என்க.
மரீசியைப் புட்பமாகரண்டத்தே எதிர்கொண்டு போற்றிய துரும காந்தனை என்க.

( 11 )