இதுமுதல் 9 செய்யுள்கள்,
அச்சுவகண்டன் காமக்களியாட்டம் கூறுவன

611. பஞ்சி மேன்மிதிக் கிற்பனிக் குந்தகை
யஞ்சி லோதிய ரம்முலை நாஞ்சிலா
மஞ்சு தோய்வரை மார்ப 4மடுத்துழத்
துஞ்ச லோவுந் தொழிலின னாயினான்.
 
 

      (இ - ள்.) பஞ்சிமேன் மிதிக்கிற் பனிக்கும் தகை - பஞ்சுக் குவியலை மிதித்தாலும்
பொறாது நடுங்கும் மெல்லடியராந் தன்மையுடைய, அம்சில் ஓதியர் - அழகிய சிலவாகிய
கூந்தலையுடைய மகளிர்கள், அம்முலை நாஞ்சிலா - தம் அழகிய முலைகளைக்
கலப்பையாகக்கொண்டு, மஞ்சுதோய்வரை மார்பம் - முகில்படியும் மலையை ஒத்த 
அச்சுவகண்டனுடைய மார்பகத்தை வயலாக வைத்து, மடுத்துஉழ - நன்கு உழுதலாலே, துஞ்சல் ஓவும் தொழிலினன் ஆயினான் - உறக்கம் ஒழித்து அக்காமத்தொழில்
ஒன்றிலேயே மிக்கவன் ஆனான். ஆண்டுப் பயாபதி “காவல் ஓவுங்கொல் என்று கண்படான்“ என்றதை - ஈண்டு  அச்சுவகண்டன் துஞ்சலோவும் தொழிலினன் ஆயினான்,
என்பதனோடு வைத்து ஆராய்க,(எ - று.)

     மிதிக்கினும் எனல் வேண்டிய உம்மை விகாரத்தால் தொக்கது.
     “அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
     அடிக்கு நெருஞ்சிப் பழம்“
    
     என்றார் திருவள்ளுவரும். அம்முலை நாஞ்சிலா என்றமையால் மார்பாகிய வயல்
என்று கூறுக. அச்சுவ கண்டன் கழி காமமுடையனாய் அத்தொழிலிலே மிக்கான் என்க.

( 39 )