(இ - ள்.) ஆரம் தங்கிய மார்பனும் - முத்துமாலை கிடந்து புரளும் மார்பினையுடைய அச்சுவகண்டனும், அந்தளிர்க்கு ஆரும் கொம்பு அனையாரும் - அழகிய மாந்தளிரை ஒத்த மேனியுடைய பூங்கொடிபோலும் மடவாரும், கலந்துழி - கலவி நிகழ்த்தியபொழுது, தாரும் கொங்கைகளும் பொர - அச்சுவகண்டன் மார்பகத்தனவாகிய மாலைகளும், மகளிர் கொங்கை களும் தம்முள் மோதிப் போர்புரிய, அணிவண்டினம் தாம் சில - அழகிய அளிக்குலங்கள் சில, வாரம்பட்டு ஆர்த்தவே!, - நியாயம் இழந்து ஆரவாரம் செய்தன, (எ - று.) நியாயம் இழத்தலாவது : வண்டினங்களுக்குரிய மலர்களையும் அவற்றிலுள்ள தேனையும் இழக்கும்படி அவற்றை இரியச் செய்தல். வாரம் - பக்ஷபாதம். வாரம் சொன்னான் மனை என்பதனாலிதனை யறிக. இரண்டு பகைவர் பொருதும்போது நொதுமல் ஆகிய வண்டுகள் உண்டியுறையுள் இழத்தல் நியாய மல்லாமை காண்க. இதன்கண் புணர்ச்சி கூறப்பட்டது. |