(இ - ள்.) கொம்பனையார்கள் - பூங்கொம்பு போன்ற இளமகளிர்கள், வள்ளத்தினுள் - பொற்கிண்ணத்தில், வண்டுதோய் மதுவாக்கிக்கொண்டு - அளிகள்மொய்க்கும் கள்ளைப்பெய்து நிறைத்துக்கொண்டு வந்து, கொடுப்ப அஃதுண்டு - கொடுக்க அக்கள்ளை நிறையக்குடித்து, மற்றவர் - மேலும் அவ்விள மகளிர்களின், ஒண்துவர்வாய் - ஒள்ளிய பவளவாயின் கண்ணதாகிய, ஒளித்தொண்டையங்கனி இன்சுவை எய்தினான் - ஒளியை யுடைய தொண்டைக்கனியை ஒத்த அதரங்களின் ஊறலாகிய இனிய சுவையையும் நுகர்வானாயினான், (எ - று.) கள்ளும் காமமும் இடையறாது நுகர்ந்தான் என்பதாம். தொண்டைக் கனி - கொவ்வைக் கனி. |