(இ - ள்.) மண்கனிந்த முழவின் - மார்ச்சனையமைந்த மத்தள இசையுடனே நிகழும், மடந்தையர் கண்கனிந்திடும் நாடகக் காட்சியும் - ஆடன்மகளிர் கண்களில் மெய்ப்பாடாக வெளிப்பட்டுத் தோன்றும் கூத்தாகிய காட்சியின்பத்தையும், பண்கனிந்த இன்தீங்குரல் பாடலும் - பாடன் மகளிருடைய பண்முற்றுப் பெற்ற இனிய மிடற்றுப்பாடலின்பத்தையும், விண்கனிந்திடவே விழைவெய்தினான் - தேவர்களும் உளம் நெகிழும்படி விரும்பி நுகர்வானாயினன், (எ - று.) காண்போர் கண்ணைக் கனிவிக்கும் நாடகமுமாம். விண் - தேவர்: ஆகுபெயர். இவ்வின்பங்கள் தேவர்களையும் உருக்குதலால், விண்கனிந்திட என்றார். இதன்கண் மகளிரின்பாற்பெறும் காட்சி இன்பமும் செவியின்பமும் கூறப்பட்டன. |