அச்சுவகண்டனின் அரசியல்

620. சீறிற் றேர்த்துணர் வின்றிச் செகுத்திடு
மாறுண் டென்பதொர் மாற்றம் பொறான்மனந்
தேறின் யாரையும் தேறுஞ் செருக்கொடிவ்
வாறு சென்ற தவற்கர சென்பவே.
 

      (இ - ள்.) மாறு உண்டு என்பதொர் மாற்றம் பொறான் - (அமைச்சர்கள் அரிதிற்
செவ்விபெற்று) அரசே நமக்குப் பகைவர்கள் உளர் என்று சொல்லும் பொழுது
அச்சொல்லைக் கேட்கவும் பொறுக்கமாட்டான், சீறில் - அப்பகைவரைச் சினக்குமிடத்து,
தேர்ந்து உணர்வின்றி - (வினையிடத்துச் செல்லும் அரசர்கள் செய்தற்பாலனவாகிய)
தேர்தலும் தேர்ந்து தெளிதலும் செய்யாதவனாய், செகுத்திடும் - பகையென்று கூறிய
துணையானே அவரைக் கொல்ல முற்படுவான், மனம் தேறின் - அவன் ஒருவனைத்
தெளியலுறின், யாரையும் - (நட்டார் பகைவர் நொதுமல் என்னும் முத்திறத்தாருள்)
யாவரேயாயினும், தேறும் - (இன்னர் இவர் எமக்கு யாமின்னம் இவர்க்கென ஆராயாமலே)
தெளிந்துகொள்வான், செருக்கொடு - பொச்சாப்போடு, அவற்கு அரசு இவ்வாறு சென்றது -
அவ்வச்சுவகண்டனுக்கு அரசியலறம் இங்ஙனமாக நடைபெற்றது, (எ - று.)

     அரசு என்றது, இகழ்ச்சிக்குறிப்பு; என்னை? அரசர்க்கு ஆகா எனச் சான்றோரால்
விலக்கப்பட்ட தீக்குணங்கள் உண்மை செப்பி, “அவற்கு“ என விதந்தோதி அரசு
சென்றதென்றலின் என்க. இவை அரசற்காகாதன என்பதைத் திருக்குறள் முதலிய மெய்ந்நூல்களானறிக.

( 48 )