(இ - ள்.) மகிழ்ச்சியுள் மதி மைந்துறும்போது - தனது மனத்தின்கண் ணிறைந்த மகிழ்ச்சி காரணமாக அறிவு வலியுறும்பொழுது, இகழ்ச்சியிற் கெடுவார்களை எண்ணுக என - முற்காலத்து அங்ஙனம் மைந்துற்றதனாலாய சோர்வால் உலகில் கெட்டுப் போனவர்களை எண்ணிப் பார்த்திடுக என்று, புகழ்ச்சி நூலுள் புகன்றனர் - புகழப்படுகின்ற மெய்ந்நூலில் சான்றோர் கூறிவைத்துள்ளனர், பூவினுள் - உலகினுள்ளே, திகழ்ச்சி செல் - புகழ் பரவிய, பொன் மணிமுடி மன்னனே! - பொன்னாலும் மணியாலும் புனைந்த மோலியையுடைய வேந்தனே!, ( ) புகழ்ச்சி நூல் - திருக்குறள். அதன்கட் புகன்றதாவது: “இகழ்ச்சியிற் கெட்டாரை யுள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து“ (539) என்பது. இச் செய்யுளில் திருக்குறள் ஒன்றினை முழுதாகப் பெய்து அம் மெய்ந்நூலையும் புகழ்ச்சி நூலெனத் தேவர் புகழ்தல் காண்க. |