நிமித்திகன் கூறுதல்
631. பூமி மேற்புரி சைம்மதிற் போதன
நாம நன்னக ராளு நகைமலர்த்
தாம நீண்முடி யான்றன் புதல்வர்கள்
காம வேளனை யாருளர் 2காண்டியால்.  

     (இ - ள்.) பூமிமேற் புரிசை மதில் போதனம் நாம நன்னகர் - நிலத்தின்மேல்
புரிசையென்னும் உறுப்பினையுடைய மதில்களாற் சூழப்பட்ட போதனம் என்னும்,
பெயரையுடைய நலம் சிறந்த நகரம் ஒன்று உளதன்றே, ஆளும் நகைமலர்த்தாமம்
நீள்முடியான்றன் - அந் நகரின்கண் வீற்றிருந்த ஆட்சி செய்யும் விளக்கமுள்ள
மலர்மாலையை அணிந்துள்ள நீண்ட முடிமன்னனாவான் பயாபதியின், புதல்வர்கள்
காமவேள் அனையார் உளர் காண்டி ஆல் - மகார்களாவார் உருவநலத்தால்
மன்மதனையே ஒப்பர், விசயன் திவிட்டன் என்பார் இருவர் உளராதலை நீ அறிவாயன்றே,
(எ - று.)
உத்தரசேடி மலைமேலதாகலின் போதனத்தைப் பூமிமேலது என்றான், ஆல் : அசை.
பயாபதி மன்னனையும் அவன் மக்களையும் அச்சுவகண்டன் பண்டே அறிந்துளன் என்பது
தோன்றக் காண்டியால் என்றான் என்க.
 

( 59 )