(இ - ள்.) முத்த நீண்முடியாய் - முத்துமாலை சூட்டப்பெற்ற நீண்ட முடியுடைய வேந்தே!, முன்னம் மற்றதற்கு ஒத்தவாறு உணர்ந்தீ!, என - அப்பகை மூள்வதற்கு முன்னரே அதனை வெல்வதற்கேற்றதொரு வழியை நீ அறிந்து கடைப்பிடித்தருள்க என்று நிமித்திகன் கூறினானாக, என் செய்யும்! மைத்தகை மனத்தான் மனித்தன் என - அச்சுவகண்டன், ஆ, என்னை மைபோலும் இருள் மனத்து எளிய மானுடன் ஆகிய அத்திவிட்டன் செய்யக்கிடந்த தென்னை! என்று கூறி, கைத்தலம் கதிர்வீச மறித்தனன் - கைகளின் அணிகள் ஒளிக்கற்றை காலுமாறு தடுத்தான், (எ - று.) தான் விஞ்சையன் ஆகலின் மனித்தன் என இகழ்ந்து கூறினான். உணர்க என்னும் முன்னிலை ஏவல் வினைக்கண் ஈ அந்நிலை மரபின் மெய்யூர்ந்து உணர்ந்தி என வந்தது. |