(இ - ள்.) புலவர்சொல் வழிபோற்றிலன் என்பதோர் அலகில் புன்சொலுக்கு அஞ்சுவன் - அறிவுடையோர் கூறிய நெறியின்கண் அச்சுவ கண்டன் நின்றானில்லை, என்னுமொரு முடிவில்லாத பழிச்சொல் உண்டாமே என்று யான் சிறிது அஞ்சாநிற்பேன், அல்லதேல் - இல்லையாயின், உலகம் ஒப்ப உடன்று எழுமாயினும் மலைவன் - (இத்திவிட்டன் முதலியோர் கிடக்க) இப்பேருலகத்தே வாழ்வார் எல்லாம் என்பாற் பகை கொண்டு என்னை எதிர்த்தெழுந்து வருதலுண்டாயபோதும், அஞ்சேன் - அவரையெல்லாம் எதிர்த்துப் போர்செய்து கொல்லலும் கொல்வேன், மற்றதன்கண் மதிப்பில்லை - இங்ஙனமாதலின் பகையின்பால் எனக்கு ஆராய்ச்சியில்லை, (எ - று.) அச்சுவகண்டன் புலவர் சொல் போற்றாப் புல்லியன் என்று உலகம் கூறுமென்றஞ்சியே எனக்குப் பகையுளதென்னும் உன்சொல்லைப் பொறுமையுடன் இதுகாறும் கேட்டேனல்லது உலகம் முழுதும் ஒரு கணத்தே வெல்லும் ஆற்றலுடைய யான் எனக்குப் பகையுளதாம்என்று எண்ணுதலும் மதித்தலும் இல்லை என்றான் என்க. (68) (பாடம்) 1. நில்லலன். |