(இ - ள்.) அலங்கல் ஆழியினான் - மலர்மாலை வேய்ந்த சக்கரப் படையை ஏந்தும் அச்சுவகண்டன், அதுகூறலும் - அங்ஙனம் சொன்னவுடனே, உலங்கொள் தோளவனுக்கு - கற்போன்ற வலிய தோள்களையுடைய அச்சுவகண்டன் உணர்ச்சிக்கு, உணர்வாயினார் - பொருந்திய உணர்ச்சியே உடையவர்களும், கலங்குநூல் கருமத்தொழின் மாக்கள்தாம் - தெளிவின்றிக் கலங்கிக் கிடக்கும் பொய்ந்நூல்களை ஓதி அவைகாட்டும் நெறியில் நின்று காரியம்செய்ய முற்படுபவரும் பகுத்தறி வற்ற வரும் ஆகிய அமைச்சர்கள், புலங்கொள் சூழ்ச்சியராகி - தத்தம் புல்லறிவிற்குப் பொருந்திய ஆராய்ச்சியுடையராய், புகன்றனர் - அரசனை நோக்கிக்கூறத் தொடங்கினார், (எ - று.) மாக்கள் - பகுத்தறிவற்றவர். வழிமொழிவதல்லது இடித்துரைப்பார் அல்லர் என்பார், அவனுக்கு உணர்வாயினார் என்றார். ஆழியினான் கூறலும், கலங்கு நூல் கருமத் தொழில்மாக்கள் சூழ்ச்சியராகிப் புகன்றனர் என்க. |