இவ்விருவரும் பயாபதியுடன் கூடியுறைந்த இன்பநலம் | 65. | பெருமக 2னுருகும் பெண்மை மாண்பினும் பேணி நாளும் மருவினும் புதிய போலும் மழலையங் கிளவி யாலும்; திருமகள் புலமை யாக்குஞ் செல்விஎன் றிவர்கள் போல இருவரு மிறைவ னுள்ளத் தொருவரா யினிய ரானார். | (இ - ள்.) பெருமகன் உருகும் பெண்மை மாண்பினும் - பயாபதி மன்னனுடைய உள்ளத்தை உருகுமாறு செய்கிற பெண்தன்மைச் சிறப்பினாலும்; நாளும்பேணி - தினந்தோறும் ஒருவரை ஒருவர் விரும்பி; மருவினும் - பொருந்தியிருந்தாலும்; புதிய போலும் மழலைஅம் கிளவியாலும் - புதியனவாகத் தோன்றுகின்ற மழலைத்தன்மையுடைய அழகிய சொற்களாலும்; இருவரும் - மிகாபதி சசி என்ற இருமனைவியரும்; திருமகள் - செல்வத்திற்குரியவளாகிய மலர் மகள்; புலமை ஆக்கும் செல்வி - அறிவையுண்டாக்கும் கலைமகள்; என்று இவர்கள்போல - என்று கூறப் பெறுகின்ற இவ்விருவரையும் போன்று; இறைவன் உள்ளத்து - அரசனுடைய மனத்தகத்திலே; ஒருவராய் - இருவர்களாக இல்லாமல் ஒருவரைப் போன்றே; இனியர்ஆனார் - இனிய தன்மையுடையவர்கள் ஆனார்கள். (எ - று.) திருமகளையும் கலைமகளையும் போன்று இருவரும் திகழ்ந்தனர். ஒருவனுக்கு இரு மனைவியர் அமையின் ஒவ்வொருவருடைய குண நலன்களும் ஒவ்வொரு வகையாக அமைந்து ஏற்றத் தாழ்வுடன் விளங்குதலும், அவர்களுள் நல்லியல்புடையார்மாட்டுத் தலைவன் மிகுந்த பற்றுக்கொள்ளுதலும் உலகத்தியல்பு. பயாபதியின் மனைவியரிருவரும் குணநலன்களிலும் இன்பநலன்களிலும் ஏற்றத்தாழ்வு அமைந்தவர்கள் அல்லர். இரு மனைவியரும் அழகு நலம், அறிவுநலம், இன்பநலம், குணநலம் ஆகிய எல்லாவற்றினும் ஒரேதன்மையில் அமைந்து நின்று உருவத்தால் இருவராக இருந்தும் பண்பால் ஒருவர் போன்றே ஆயினர். | ( 30 ) | | |
|
|