(இ - ள்.) நீள்கடை காப்போய் - நீண்ட வாயிலைக் காக்கும் காவலனே!. மன்னன்முன் நீ தலைசென்று - உங்கள் வேந்தனாகிய பயாபதியின்பால் நீ சென்ற, வேய்தலை நீடிய வெள்ளி விலங்கலின் - உச்சியில் மூங்கில்கள் நீண்டுள்ள வெள்ளிமலையின் அரசனான, ஓய்தலில் ஒண்சுடர் ஆழியினான் தமர் - ஒழிவில்லாது ஒளிகாலும் ஆழிப்படையை யுடைய அச்சுவகண்டனைச் சார்ந்த தூதர்கள், வந்து வாய்தலில் நின்றனர் என - வந்து நம் அரண்மனை வாயிலில் நின்றுளர் என்று, உரை - அறிவிப் பாயாக( ) அரண்மனை வாயிலை அடைந்த அத்தூர்கள் வாயில்காவலனை நோக்கிக் கூறுகின்றவர் “ஆழியினான் தமர் நம் வாயிலில் வந்து நின்றார் என்று உன்னரசற்கு உரை“ என்றார் என்க. தூதருடைய கூற்றில் அதிகார ஆணவம் தோன்றுதல் காண்க. |