(இ - ள்.) மதியினை மலரச்சூழ்ந்து - அறிவை விரிவுறவைத்து ஆராய்ந்து, வருந்தித்தாம் படைக்கப்பட்ட - மனம்மொழி மெய்களால் தாமே வருந்தி ஈட்டப்பட்ட, நிதியினை நுகர்தும் என்று நினைத்து இருந்த போழ்தில் - பொருள்களை இனி அநுபவிப்போம் என்று எண்ணி இருக்கின்ற பொழுதில், பதியினைக் கலக்கிச்சென்று பறித்துத் தாம் - அங்ஙனம் எண்ணியிருந்தாருடைய உறையுள் முதலியவற்றையும் நிலை குலையச் செய்துபோய் அவர் வருந்தியீட்டிய நிதிக்குவியல்களையும் பிடுங்கி, பிறர்க்கு நீட்டும் விதியினை விலக்கமாட்டா - ஏதிலாராய பிறர்பால் கொடுக்கின்ற தீய போகூழை அகற்ற இயலாத வராய், வெளிய நிரார் மெலிபவால் - பேதையர் வருந்தா நிற்பர், (எ - று.) மாட்டா : துவ்வீறு தொக்கது, ஆல் : அசை. ஒருவன் அறிவாலே ஆராய்ந்து உடல் வருந்தி ஈட்டிய பொருளை இனி நுகர்வாம் என்றிருக்கும்போது பகைவர் புக்கு அவன் உறையுள் முதலியவற்றைக் குலைத்து அவன் பொருளை ஏதிலார்க்குக் கொடுக்கும் படி செய்வது போகூழே ஆகும். அப்போகூழை மாற்றலாற்றாது பேதைகள் வருந்தா நிற்பர் என்பதாம். |