மங்கையர் மன்னனைப் பிணித்து வைத்தல்

67. சொற்பகர்ந் துலகங் காக்குந் தொழில்புறத் தொழிய வாங்கி
மற்பக ரகலத் தானை மனத்திடைப் பிணித்து வைத்தார்
பொற்பகங் கமழப் பூத்த தேந்துணர் பொறுக்க லாற்றாக்
கற்பகக் கொழுந்துங் 1காம வல்லியங் கொடியு மொப்பார்.
 

     (இ - ள்.) கமழ - மணம்வீச; அகம் - தன்னிடத்திலே; பூத்த - அலர்ந்த; பொற்பு -
அழகாகிய; தேந்துணர் பொறுக்கல் ஆற்றா - தேனையுடைய பூங்கொத்தைத்
தாங்கமாட்டாது; கற்பகக்கொழுந்தும் - கற்பக மரத்தின் இளந்தளிரையும்; காமவல்லி
அம்கொடியும் - காமவல்லி என்னும் அழகிய பூங்கொடியையும்; ஒப்பார் - ஒத்தவர்களான
அவ்விரண்டு மங்கையரும்; சொல்பகர்ந்து உலகம் காக்கும் தொழில் - கட்டளைச்
சொற்களைக் கூறி உலகத்தைப் பாதுகாக்கும் வேலையை; புறத்து ஒழியவாங்கி - அமைச்சர்
முதலாயினாரிடத்திலே நீக்கி; மல்பகர் அகலத்தானை - மல்தொழில் தன்மையை
வெளிப்படுத்துகின்ற அகன்ற மார்பையுடையவனான பயாபதி மன்னனை; மனத்து இடை
பிணித்துவைத்தார் - உள்ளத்திலே கட்டி வைத்தார்கள். (எ - று.)

     தம்மிடத்துள்ள வேட்கை மிகுதியால் அரசன் அரசியல் அலுவல்களை அமைச்சரிடம்
ஒப்புவித்துத், தம்முடனே எப்பொழுதும் இன்புற்றிருக்கும்படி அம்மங்கையர் மன்னனைத்
தம் வழிப்படுத்தி வைத்தனர். மனத்திடைப் பிணித்துவைத்தார் - அரசன் தமது
மனக்கருத்தின்படி நடக்குமாறு வழிப்படுத்தி வைத்தார்கள். காமவல்லி...கற்பக தருவிற்
படருங்கொடி.

     ஒரு தேவிக்குக் கற்பகத்தின் கொழுந்தையும் மற்றொருத்திக்குக் காமவல்லியையும்
உவமையாகக் கூறியபடியால் பயாபதிக்குக் கற்பகமரம் உவமையாதல் உய்த்துணர்க.
 

( 32 )