பயாபதி தன் மக்களறியாதபடி திறைப்பொருள்
செலுத்த நினைதல்
672. ஆளிகட் கரச னன்ன வரசர்கோ னதனைக் 3கூறி
வாளிவிற் றடக்கை வெம்போர் மணிவரை யனைய மார்பிற்
காளைக ளிதனைக் கேட்பிற் 4கனல்பவா லவரை யின்னே
மீளுமா றமைப்ப னென்று வேண்டுவ விதியி னீந்தான்.

 

     (இ - ள்.) ஆளிகட்கு அரசன் அன்ன அரசர்கோன் - சிங்கங் களுக்கும் அரசாகிய
சிங்கத்தை ஒத்த பயாபதி மன்னன், அனையகூறி - தூதரிடத்து அவ்வுரைகளைச் சொல்லி,
வாளிவிற்றடக்கை வெம்போர் - அம்புவிடும் விற்படை பிடித்த பெரிய
கைகளையுடையவரும். வெவ்விய போரிக்கண் வல்லவரும் ஆகிய, காளைகள் இதனைக்
கேட்பில் கனல்பவால் - காளைபோன்றவராகிய என்மக்கள் விசய திவிட்டர்கள்
இச்செய்தியைக் கேட்பார்களாயின் வெகுள்வார்கள் ஆதலால், இவரையின்னே மீளுமாறு
அமைப்பன் என்று - இத்தூதுவர்களை (அவர்கள் அறியு முன்னரே) இப்பொழுதே
திரும்பிச்செல்லுமாறு செய்குவல் என்று நினைத்து, வேண்டுவ விதின் ஈந்தான் - அவர்கள்
செல்வதற்கு வேண்டியவற்றை முறைப்படி வழங்கினான், (எ - று.)

இளங்கன்று பயம் அறியாதென்ப வாகலின் பின் விளைவு தேறாது மக்கள் வெகுள்வர்;
அவரறியாமலே யான் இத்தூதர்பாற் றிறை நல்கி இவரைச் செலுத்துவல் என்று கருதிச்
செலுத்தற்பால பொருண் முழுதும் செலுத்தினான் என்க.

( 100 )