(இ - ள்.) காய்ந்தொளிர் - கனன்றெரிவது போன்று ஒளிரும், பவளச்சாதி கடிகைகள் - பவள வகைகளான துண்டுகளும்; காணமின்னுப் பாய்ந்து எழுசுடர் சங்கீன்ற பருமணித் தரளக்கோவை - விரும்பிக் காணுமாறு மின்னல்கள் பாய்ந்தெழுந்து மிளிரும் சங்குகள் ஈன்ற பரிய மணிகளாகிய முத்துக்களாலய மாலைகளும், ஏந்தெழில் காகதுண்டம் - மிக்க அழகுடைய அகில்களும், மருப்பிணை - யானைக் கோடுகளும், கவரிக்கற்றை - கவரிமான் மயிர்க் கற்றைகளும், ஆய்ந்தெழின் மகரப் பூணான் உவப்பன - ஆராய்ந்தெடுத்து அழகுடைய மகரமீன் வடிவமாகச் செய்யப்பட்ட அணிகலன்களையுடைய அச்சுவகண்டன் விரும்பிய பொருள்கள், அனைத்தும் ஈந்தான் - முழுதும் கொடுத்தான், (எ - று.) பவழக் கடிகைகள், தரளக்கோவை, காகதுண்டம், மருப்பிணை, கவரிக் கற்றை ஆகியவற்றைப் பூணான் திறையாகக் கொடுத்தான் என்க. |