பயாபதி திறை நல்கியதனை விசயதிவிட்டர்கள் காண்டல்

678. 1அஞ்சுடர் வயிரப் பூணா னருளினன் விடுப்ப வாங்கண்
விஞ்சையர் விமானந் 2தோன்ற மேலருங் கலங்க ளேற்றிச்
செஞ்சுடர்த் திலகச் செவ்வாய் மகளிரை விமானஞ் சேர்த்திக்
கஞ்சிகை மறைக்கும் போழ்திற் காளைக 3ளதனைக் கண்டார்.
 

     (இ - ள்.) அஞ்சுடர் வயிரப்பூணான் அருளினன் விடுப்ப - அழகிய ஒளிமிக்க வயிர
அணிகலன்களையுடைய பயாபதி வேந்தன் தூதுவர்களுக்கு விடை முதலியன கொடுத்துவிட,
ஆங்கண் - அப்பொழுது, விஞ்சையர் - விச்சாதரராகிய தூதுவர்கள், விமானந்தோற்ற -
தங்கள் வித்தையாலே செய்த விமானங்கள் தோன்றாநிற்றலால்; மேல் அருங்கலங்கள் ஏற்றி
- அவ்வி மானத்தில் பெறற்கரிய அணிகலன் முதலியவற்றை ஏற்றிய பின்னர், செஞ்சுடர்த்
திலகம் செவ்வாய் மகளிரை - செவ்விய சுடருடைய திலகமிட்ட வரும் சிவந்த
வாயினையுடையவரும் ஆகிய மகளிர்களையும், விமானம் சேர்த்திக் கஞ்சிகை மறைக்கும்
போழ்தில் - வானவூர்தியில் ஏறச்செய்து திரையிடும்பொழுது, காளைகள் - விசய
திவிட்டர்கள், அதனைக் கண்டார் - அச்செயலை நேரிற் கண்டு கொண்டனர், (எ - று.)

     பயாபதி கொடுத்த திறைப்பொருள்களை, விச்சாதரர் விமானத்தில் ஏற்றி மகளிரையும்
விமானத் தேற்றித் திரையிட்டு மறைக்கும் அமயத்தே விசயதிவிட்டர் அவற்றைக்
காணலுற்றனர், என்க. அத தூதர் இப்பொருளைக் கொண்டுபோதற்குத் தம் வித்தையாலே
விமானங்களைப் படைத்துக் கொண்டனர் என்பதுபட விஞ்சையர் விமானந்தோன்ற என்றார்
கஞ்சிகை - திரை. காளைகள் - விசயதிவிட்டர்.
 

( 106 )