688. பாழியான் மெலிந்தவர் திறத்துப் பண்டெலா
மாழியால் வெருட்டிநின் றடர்த்திர் 1போலுமஃ
தேழைகா ளினியொழிந் திட்டுச் செவ்வனே
வாழுமா றறிந்துயிர் காத்து வாழ்மினே.

     (இ - ள்.) ஏழைகாள் - அறிவில்லாத எளியவர்களே ! பண்டு எலாம் - பழைய
காலத்திலெல்லாம், பாழியால் மெலிந்தவர் திறத்து - வலிமையின்மையால்
மெலிந்தவரிடத்தே சென்று, ஆழியால் வெருட்டி - நும்சக்கரப்படையைக் காட்டி அவரை
அச்சுறுத்தி, நின்று அடர்த்திர் போலும் - அஞ்சாமல் நின்று அவரைவென்று
திறைகொண்டனிர் போலும், அஃது இனியொழிந்திட்டு - அங்ஙனம் அச்சுறுத்தும்
தொழிலை இனி விடுத்து, வாழும் ஆறு செவ்வனே அறிந்து - நீயிர் உங்கட்கே கேட்டினை
வலிந்து தேடிக்கொள்ளாமல் நன்கு வாழ்வதற்குரிய வழிகளை நன்றாக ஆராய்ந்
தறிந்துகொண்டு, உயிர் காத்து வாழ்மின்-உங்கள் உயிரை ஓம்பி வாழ்க! (எ-று.)

     பாழி - வலிமை. பாழியின்மையால் மெலிந்தவர் என்க. ஒழிந்திட்டு - ஒருசொல். செவ்வனே - செம்மையுடனே.
 

( 116 )