(இ - ள்.) அரும்பெறல் அறிவின் - அரிதில் முயன்று பெற்ற அறிவையுடையோனும், செல்வன் - சிறந்த செல்வம் உடையவனும், சுரும்பு இவர் தொடையல் மார்பன் - அளிகள் மொய்க்கின்ற பூந்தொடையலை அணிந்துள்ள மார்பினனும் ஆகிய, அரிமஞ்சு அதனைக்கேட்டே - அரிமஞ்சு என்னும் அவ் அமைச்சன் அத்தூதர்கள் கூறிய செய்தியைக் கேட்டு, பெரியவன் - பெரியவனாகிய அச்சுவகண்டன், பெரும்பகை அதனைக் கேட்பில் சிறிதும் நோனான் - பெரும்பகைக்குக் காரணமான அத்திவிட்டன் கூற்றைச் செவியுறப் பெறின் ஒரு சிறிதும் பொறான், இரும்பகையிதனை - பெரிய பகையாகிய இந்நிகழ்ச்சியை, என் கொல் விலக்கும் ஆறு என்று - நிகழாமற்றடுக்கும் வழியாது என்று, தானே சூழ்ச்சி கொள் மனத்தன் ஆனான் - தனக்குள் தானே ஆராய்ந்துகொள்ளும் நெஞ்சையுடையவன் ஆனான், (எ - று.) தூதர்கள் கூறக்கேட்ட அரிமஞ்சுவும், உடனே அச்சுவகண்டனுக்கு இதனைக் கூறின் அவன் பொறான்; இப்பகையை எளிதிற்றீர்க்கும் ஆறு வேறு யாதாம் என ஆராய்ந்தான், என்க. |