(இ - ள்.) அன்னணம் - அவ்வாறு, மனத்தினாலே இழைத்து - மனத்தின்கண் சிந்தனைசெய்து, அரிகேது என்னும் - அரிகேது என்னும் பெயரையுடையவனும், மின் அணங்கு உருவப்பைம்பூண் விஞ்சையன் தன்னைக்கூவி - ஒளிமிகுதியால் மின்னலையும் மழுங்கச் செய்யும் அழகிய பசிய அணிகலன்களையுடையவனும் ஆகிய விச்சாதரன் ஒருவனை அழைத்து, கல்நவில் தோளினாற்கு - கல்லைஒத்த தோளையுடைய அவ்வரி கேதுவிற்கு, கருமம் ஈது என்று காட்டி - அவன் செய்யவேண்டிய காரியம் இதுவெனக்கூறி, மாயமன்னும் ஓர்சீயம் ஆகென - மாயமே நிலைபெற்ற ஒரு சிங்கம் ஆகுக என்று, வகுத்துவிட்டான் - கூறி ஏவினான், (எ - று.) அரிமஞ்சு இவ்வாறு கருதி, அரிகேது என்பானை அழைத்துக் கருமம் உணர்த்தி, மாயச்சிங்கம் ஆகென விட்டான் என்க. கருமம் ஈதென்று காட்டி என்றது நீ இவ்வாறு திவிட்டனை ஏமாற்றி மெய்ச் சிங்கத்தோடு புணர்த்திவிடல் வேண்டும் என்று கூறிய சூழ்ச்சியை என்க. |