திவிட்டன் வியந்து அயல் நின்றாரை வினாதல்

705. என்று மற்றது மொழிமினென் றுரைத்தெமை விடுத்தா
னென்ற மாற்றமஃ திசைத்தலு மிளையவ னென்னே
சென்ற நாட்டகஞ் சிலம்பநின் றிடித்துயி ரலறக்
கொன்றொர் கோளரி 1கொடுமுடி யுறைவதோ வென்றான்.
 

      (இ - ள்.) என்று - என இவ்வாறு கூறி, மற்றது மொழி மின் - இச்செய்தியைத்
திவிட்டன்பாற் சென்று கூறுங்கோள், என்றுரைத்து எமை விடுத்தான் - என்று எமக்குக்
கட்டளையிட்டு உன்னிடம் விட்டான், என்ற மாற்றம் அஃதிசைத்தலும் - என்ற
அம்மொழிகளைத் தூதுவர்கள் கூறியவுடனே, இளையவன் - திவிட்டனும், என்னே! -
என்னே இஃதென்னே! (என வியப்புற்றவனாய்), சென்ற நாட்டகம் சிலம்ப - அவ்வரிமா
சென்று முழங்கிய நாட்டினுள் எதிர் ஒலியான் முழக்கம் உண்டாம்படி, நின்று இடித்து -
நின்று இடி இடிப்பது போல முழங்கி, உயிர் அலறக் கொன்று - உயிர்த்தொகைகள்
அலறும்படி கொன்று திரிவதாகிய, ஓர் கோளரி - சிங்கம் ஒன்று, கொடுமுடி உறைவதோ
என்றான் - நம் மலைச்சிகரத்தமைந்த குகையினுள் வதிகின்றதேயோ என்று வினவினான், (எ - று.)

     என்று இச்செய்தியை உன்னிடம் கூறுமாறு எம்மை ஏவினான் என்றனராகத்
திவிட்டன் வியப்புற்று நாடுசிலம்ப இடித்து உயிர் அலறக் கொன்று திரியும் கோளரி ஒன்று
நம் மலையில் உளதோ என அயனின்றாரை வினாவினான் என்க.

( 133 )