அவ் வரிமாவின் எதிர் திவிட்டன் போர்க் கோலம் பூண்டு முழங்குதல்

713. காளை - காளொளி முகில்வண்ணன் கழல்களை விசியாத்
தோளின் மேற்செலச் சுடர்விடு கடகங்கள் செறியாச்
சூளி மாமணித் தொடர்கொண்டு சுரிகுஞ்சி பிணியா
ஆளி மொய்ம்பனங் கார்த்தன 2னுடைந்ததவ் வரியே.
 

    (இ - ள்.) காளை - காளையை ஒத்த தோற்றமுடையவனும், ஆளி மொய்ம்பன் -
சிங்கத்தை ஒத்த வலியுடையவனும் காள் ஒளி - கரிய நிறமுடைய, முகில்வண்ணன் -
மேகம் போன்ற நிறமுடையவனும் ஆகிய திவிட்டனும் கழல்களை விசியா - வீரக்கழல்களை
இறுகக் கட்டி, சுடர்விடு கடகங்கள் தோளின் மேற்செலச் செறியா - ஒளிவீசும் கடகம்
என்னும் அணிகலன் தோளின் மேல் ஏறச்செறித்து, சூளிமாமணிகொண்டு -
சூளா மணிமாலையைக்கொண்டு, சுரிகுஞ்சி பிணியா - சுரிந்த - தலைமயிரை வரிந்துகட்டி,
அங்கு - அவ்விடத்தே, ஆர்த்தனன் - ஆரவாரித்தான், அவ்வரி உடைந்தது -
அவ்வொலியின் அதிர்ச்சியால் அம்மாயச்சீயம் அஞ்சி ஓடலாயிற்று, (எ - று.)

     சூளி மாமணிமாலை - தலைமயிரைச் சுற்றிக்கட்டும் மணிமாலை. காளம் - கருப்பு -
அது காள், என விகாரப்பட்டது.

     அவ்வரிமா முழங்குதலைக் கேட்ட திவிட்டன், கழல் விசித்துக் கடகங்களை
ஏறச்செறித்து, குஞ்சி பிணித்துத் தானும் ஆரவாரித்தான்; உடனே அவ் வரிமா அஞ்சி உடைந் தோடிற்றென்க.
 

( 141 )