அக்குகையில் உறைந்த மெய் அரிமா இவ்வாராவாரத்தே
துயில் நீத்து எழுதல்
718. உலத்தின் வீங்கிய வொளிமணிச் சுடரணி திணிதோ
ணலத்தின் வீங்கிய நளிர்புக ழிளையவன் 3விசையின்
நிலத்தின் கம்பமு நெடுவரை யதிர்ச்சியு மெழுவப்
பிலத்தின் வாழரி யரசுதன் றுயில்பெயர்ந் ததுவே. 

     (இ - ள்.) உலத்தின் வீங்கிய - உலக்கல்லை ஒத்துத் திரண்ட, ஒளிமணிச் சுடரணி
திணிதோள் - ஒளிரும் மணிகளில் எழும் சுடர் அழகு செய்யப் பெற்ற திண்ணிய
தோளினது, நலத்தின் வீங்கிய - நலமாகிய ஆற்றலான் மிக்க, நளிர் புகழ் இளையவன் -
செறிந்த புகழை யுடைய திவிட்டனுடைய, விசையின் - வேகத்தால், நிலத்தின் கம்பமும் -
பூமியில் ஏற்பட்ட நடுக்கமும், நெடுவரை அதிர்ச்சியும் - நீண்ட மலைகளில் உண்டாகிய
அதிர்ச்சியும், எழுவ - தன்னை எழுப்புதலாலே, பிலத்தின் வாழ் அரியரசு - அந்தக்
குகையில் வாழ்வுற்றிருந்த சிங்கமாகிய விலங்கரசு, தன் துயில் பெயர்ந்தது-தனது உறக்கம்
கலைக்கப்பட்டு விழித்தெழுந்தது, (எ - று.)

     திவிட்டன் சென்ற விரைவினாலே உண்டாகிய பூமிநடுக்க முதலிய வற்றால்
அக்குகையுள் உறங்கிக் கிடந்த அரியரசு துயில்கலைந்து எழுந்த தென்க.

( 146 )