அக் குகைவாழ் மெய் அரிமாவின் முழக்கம்

720. அதிர வார்த்தலு மழன்றுத னெயிற்றிடை யலர்ந்த
கதிருங் கண்களிற் கனலெரிச் சுடர்களுங் 1கனல
முதிர்வில் கோளரி முனிந்தெதிர் முழங்கலி னெரிந்து
பிதிர்வு சென்றது பெருவரை பிளந்ததப் பிலமே.
 

    (இ - ள்.) அதிர ஆர்த்தலும் - அங்ஙனம் அதிரும்படி ஆரவாரித்தவுடனே,
முதிர்வில் கோளரி - அவ்விளஞ்சிங்கம், அழன்று - சினந்து, தன் எயிற்றிடை - தனது
பற்களிலே, அலர்ந்த கதிரும் - விரிந்த சுடர்களும், கண்களில் கனல் எரிச் சுடர்களும்
கனல - கண்களிலே கனன்று எரியும் சினத்தீயின் சுடர்களும் கனன்றெரிய, முனிந்து எதிர்
முழங்கலில் - சினந்து அவ்வாரவாரத்திற்கு எதிராகத் தானும் முழங்குதலாலே, பெருவரை
நெரிந்து பிதிர்வு சென்றது - அந்தப் பெரிய மலை இடிந்து சிதர்ந்து போயிற்று, அப்பிலமே
பிளந்தது - அக்குகையும் பிளந்தது, (எ - று.)

     எயிற்றிடை அலர்ந்த சுடரும், கண்களில் எரிச்சுடரும் கனல என்க. நம்பி
ஆரவாரித்தலும் அம்மெய்ச் சிங்கம் முனிந்து எதிர் முழங்குதலாலே பெருவரை பிதிர்ந்தது;
பிலம் பிளந்தது என்க.
 

( 148 )