அஞ்சி ஓடும் அரிமாவைத் திவிட்டன் தொடர்தல்
721. எரிந்த கண்ணிணை யிறுவரை முழைநின்ற வனைத்தும்
விரிந்த வாயொடு பணைத்தன வெளியுகிர் பரூஉத்தாள்
சுரிந்த கேசரஞ் சுடரணி வளையெயிற் றொளியா
லிரிந்த தாயிடை யிருணின்றங் கெழுந்ததவ் வரியே.
 

      (இ - ள்.) எரிந்த இணைக்கண் - சினத்தீ நின்று எரிந்த இரண்டு கண்களின்
ஒளியாலே, இறுவரை முழைநின்ற - அப்பெரிய மலைக்குகைக் கண்ணிருந்த, அனைத்தும் -
பொருள்கள் எல்லாம், விரிந்த - விளங்கித் தோன்றின; வாயொடு வெளி உகிர் பரூஉத்தாள்
சுரிந்த கேசரம் அனைத்தும் - அச்சிங்கத்தினுடைய வாயும் வெளிப்பட்ட நகங்களும் பருத்த
கால்களும் சுருண்ட மயிரையுடைய பிடரியும் ஆகிய உறுப்புக்கள் அனைத்தும், பணைத்த -
சினத்தாலே பருத்தன; சுடர்அணிவளை எயிற்று ஒளியால் - ஒளிர்ந்து அழகுடையனவாய்
வளைந்துள்ள பற்களின் ஒளியால், ஆயிடை இருள் இரிந்தது - அக்குகையின் கண் உள்ள
இருள் அகன்றது; அங்கு நின்று அவ்வரி எழுந்தது - அவ்விடத்தினின்றும் அவ் வுண்மைச்
சிங்கம் புறப்பட்டது, (எ - று)

இறுவரை - பெரிய மலை; அடிமலையுமாம், இற்ற மலையுமாம். விரிந்த - புலப்பட்டன
என்றவாறு. கேசரம், பிடரிக்கு ஆகுபெயர், வெளிப்பட்ட உகிர் என்க. சிங்கம் உகிரைச்
சுருக்கிக் கோடலும் வெளிப்படுத்தலும் உண்டு.

( 149 )