திவிட்டன் அவ்வரிமாவைப் பிளந்து கொல்லுதல்

723. அளைந்து மார்பினு ளிழிதரு குருதியைக் குடிப்பா
னுளைந்து கோளரி யெழுதலு முளைமிசை மிதியா
வளைந்த வாளெயிற் றிடைவலித் தடக்கையிற் பிடித்தான்
பிளந்து போழ்களாய்க் கிடந்ததப் பெருவலி 3யரியே.
 

     (இ - ள்.) மார்பினுள் அளைந்து - தனது வலியஉகிர்களால் மார்பினுள் துழாவி,
இழிதருகுருதியைக் குடிப்பான் - சோர்கின்ற செந்நீரைக் குடிக்கும் பொருட்டு, உளைந்து -
பிடரிக்கண் உள்ள மயிர்சிலிர்த்து, கோளரி - சிங்கம், எழுதலும் - எழுந்து தன் மேல்
பாய்தலும், உளைமிசை மிதியா - திவிட்டன் அதன் பிடரின்கண் தன் அடியை வைத்து,
வளைந்த வாள்எயிற்றிடை - வளைந்த ஒளியுடைய பற்களின் இடையின்,
வலித்தடக் கையிற் பிடித்தான் - வலிய பெரிய தன் கைகளால் பற்றினான், அப்பெருவலி அரி - அந்தப் பேராற்றலுடைய அரிமா, பிளந்து போழ்களாய்க் கிடந்தது - அவ்வளவில் பிளக்கப்பட்டு இரு பிளவுகளாகிக்கிடந்தது, (எ - று.)

     அவ்வரிமா நம்பியின் குருதியைக் குடிக்க எண்ணி எழலும் அதன் பிடர்மிசை
மிதித்து வாயிடைப் பற்றிப் பிடித்தான். அத்துணையே கண்டது, அச்சிங்கம் இருபிளவாய்க்
கிடந்தது என்க.
இங்ஙனமே கம்பரும்,

     “கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால்
     எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்“ (கார்முக - 34)

என்று கூறுதல் காண்க.
 

( 151 )